தருமபுரி, ஜூலை 10:
வரி உயர்வைக் கண்டித்து மாரண்டஅள்ளியில் வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு மற்றும் முற்றுகைப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாரண்டஅள்ளி பேரூராட்சியில் கடந்த 2008 ஜூன் 30-ம் தேதி முதல் சொத்துவரி 15%, தொழில் வரி 100%, கடைகளுக்கு 150 சதவீதம் உயர்த்தப்பட்டது.
இதைக் கண்டித்து வணிகர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தினால் கடந்த 2009 ஜூன் 3-ம் தேதி மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைப்படி வரி குறைப்புக்கான ஒப்பந்தம் போடப்பட்டு உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) பரிந்துரைக்காக அனுப்பப்பட்டது.
இந்நிலையில் வரி உயர்வைக் கண்டித்து வெள்ளிக்கிழமை அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டன. 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.